வயல்வெளி பார்த்து வறட்டி தட்டி ஓணாண் பிடித்து ஓடையில் குளித்து எதிர்வீட்டில் விளையாடி எப்படியோ படித்த நான் ஏறிவந்தேன் நகரத்துக்கு ! சிறு அறையில் குறுகிப் படுத்து சில மாதம் போர்தொடுத்து வாங்கிவிட்ட வேலையோடு வாழுகிறேன் கணிப்பொறியோடு ! சிறிதாய்த் தூங்கி கனவு தொலைத்து காலை உணவு மறந்து நெரிசலில் சிக்கி கடமை அழைக்க காற்றோடு செல்கிறேன் காசு பார்க்க ! மனசு தொட்டு வாழும் வாழ்க்கை மாறிப் போகுமோ ? மௌசு தொட்டு வாழும் வாழ்க்கை பழகிப் போகுமோ ? வால்பேப்பர் மாற்றியே வாழ்க்கை தொலைந்து போகுமோ ? சொந்த பந்த உறவுகளெல்லாம் ஷிப் பைலாய் சுருங்கிப் போகுமோ ? வாழ்க்கை தொலைந்து போகுமோ மொத்தமும் ! புரியாது புலம்புகிறேன் நித்தமும் ! தாய் மடியில் தலைவைத்து நிலவு முகம் நான் ரசித்து கதைகள் பேசி கவலைகள் மறந்த காலம் இனிதான் வருமா ? இதயம் நனைத்த இந்த வாழ்வு இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ? சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா ?
Comments
Post a Comment